பொதுவாகவே தமிழகத்தில் வாழும் பலரும் இலங்கைத் தமிழர்கள் குறித்து ஆழமான தகவல்களை பெற்றிருக்கவில்லை என்பதை அவ்வப்போது உணர்த்தி வருகின்றார்கள். இதில் இரு வேறு கருத்துகளின் தாக்கத்தால் திசைத் திருப்பப் பட்டுள்ளார்கள். சிலர் இலங்கையில் தமிழர்கள் பிரித்தானியர் காலத்தில் சென்று குடியேறியவர்கள் என நம்புகின்றனர், இன்னும் சிலரோ இலங்கையின் ஆதி குடிகளே தமிழர்கள் தான் எனவும் கூறுகின்றனர். இந்த இருவேறுக் கருத்துக்களும் உண்மையில்லை. தமிழகத்தின் மிக அருகாமையில் இலங்கை இருந்து வருவதால் வரலாற்றுக் காலந்தொட்டே இலங்கையில் தமிழர்கள் ஆதிக்கம் நிறைந்துள்ள போதும், இலங்கையில் முழுமையான தமிழர் குடியேற்றங்கள் மிகவும் காலம் கடந்தே நடந்துள்ளன என்பவையே சான்றுகள் தரும் விளக்கமாகும்.
இன்றைய இலங்கைத் தீவில் இரு பெரும் மொழி பேசுவோர் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் முறையே சிங்களவர், தமிழர் என அறியப்படுகின்றனர். இவர்களில் தமிழ் மொழி பேசுவோரின் தொகை கிட்டத்தட்ட 25 சதவீதமாகும். இவர்கள் இலங்கைத் தீவு முழுவதும் பரந்து வாழ்கின்ற போதும், இலங்கையின் வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணத்தில் கடற்கரைகளை ஒட்டிய பகுதிகளிலும், நடு மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்திலும் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தம்மை ஒரே இனமாக அறிவித்துக் கொள்ளாமல் மூன்று தேசிய இனங்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். முறையே இலங்கைத் தமிழர்கள் ( 22 லட்சம் ) , இந்திய வம்சாவளித் தமிழர்கள் ( 8 லட்சம் ) , இலங்கை முஸ்லிம்கள் ( 18 லட்சம் ).
இலங்கையின் பூர்வகுடிகள் தாம் என இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து கூறி வருகின்ற போதும், இக் கூற்று பல தரப்பட்ட ஐயங்களையும், சிக்கல்களையும் கொண்டுள்ளது. அதே போல சிங்களவர்கள் பலரும் தம்மை ஆரிய வம்சாவளி எனக் கூறிக் கொண்ட போதும், அவர்களின் உடல் அமைப்பு, உணவு, கலாச்சாரங்கள் போன்றவை தென்னிந்திய தொடர்புகளை பெரிதும் பறைசாற்றுகின்றன.
இலங்கைத் தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் இல்லையா என சிலர் கேட்பதுண்டு. அவ்வாறு கூறி விட முடியாது, சொல்ல போனால் ஆங்கிலேயர் இலங்கைத் தீவை கைப்பற்றிய பின்னர் இலங்கையில் குடியேறிய பலரும் தான் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என அறியப்படுகின்றனர். அதற்கு முன்னர் அதாவது 1796-க்கு முன்னர் இலங்கையில் குடியேறிய அனைவரும் தம்மை இலங்கைத் தமிழர்களாக கூறிக் கொள்கின்றனர். இலங்கைத் தமிழர்களின் உட்பிரிவுகளை விளக்கமாக பின்னர் காண்போம்.
இலங்கைத் தீவு முழுவதும் இலங்கை முஸ்லிம்கள் பரவி வாழ்கின்றனர். இவர்கள் முறையே மேற்கு, கிழக்கு என இருவகையாக அறியலாம். சிங்களப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் பலரும் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களை விட மொழி, கலாச்சார, பழக்க வழக்கங்களில் இருந்து மாறுபட்டவர்கள் ஆவார்கள். பல முஸ்லிம்கள் பிரித்தானியா ஆட்சிக் காலத்தில் குடியேறிய போதும் யாரும் தம்மை இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்வதில்லை. இலங்கைத் தீவிலேயே கிழக்கு மாகாணத்திலேயே முஸ்லிம்கள் அதிகளவு வாழ்கின்றார்கள், அவர்கள் யாவரும் பிரித்தானிய ஆட்சிக் காலத்திற்கு முன்னர் அங்கு குடியேறியவர்கள். பெரும்பான்மையானவர்கள் மலபார் கரையில் மதம் மாறியது போலவே இஸ்லாமுக்கு மதம் மாறிக் கொண்ட முக்குவர்கள் எனவும், மருமக்கள் தாய்வழி முறைகளை பின்பற்றியவர்கள் எனவும் அறிய முடிகின்றது.
இலங்கைத் தீவில் தம்மை இலங்கைத் தமிழர்கள் என அழைத்துக் கொள்ளும் இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகம் வாழ்கின்றனர். நீர் கொழும்பு, புத்தளம் பகுதிகளில் வாழ்ந்த பலரும் இன்று சிங்களவர்களாக மாறிக் கொண்டனர். இலங்கைத் தமிழர்கள் மூன்று வகையாக பிளவு படுகின்றனர். இவர்கள் வடக்குத் தமிழர்கள், கிழக்குத் தமிழர்கள், நீர் கொழும்புத் தமிழர்கள்.
வடக்குத் தமிழர்கள் என அறியப்படும் தமிழர்கள் மேலும் யாழ்ப்பாணத் தமிழர்கள், வன்னித் தமிழர்கள் எனவும் பிரித்துக் கொள்கின்றனர். இன்று இப்பிரிவினை இருப்பது போலத் தெரியவில்லை, ஏனெனில் பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள், மிச்சம் இருப்போர் வன்னித் தமிழர்களோடு கலந்துள்ளார்கள். 1970-களில் நடு இலங்கையில் இருந்து இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வந்த இந்தியா வம்சாவளித் தமிழர்களும் வன்னித் தமிழர்களோடு கலந்துள்ளார்கள். வன்னியின் மேற்கு வட்டமான மன்னார் பகுதிகளில் பெரும்பான்மையானோர் கத்தோலிக்கர்கள் ஆவார்கள்.
இலங்கையின் பத்தாம் நூற்றாண்டளவில் சோழர்கள் வடக்கு இலங்கையை கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் தொடர்ந்து வந்த சோழ ஆட்சியில் தஞ்சை மண்டலத்தில் இருந்து பல சோழப் படையணிகள் இலங்கையின் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி, நுவரகலாவியா, அனுராதாபுரம், மன்னன்பிட்டி, திருகோணமலை பகுதிகளில் குடியேறிக் கொண்டார்கள். சோழர்களின் ஆட்சிக் காலம் வடக்கு இலங்கையில் கிபி 990 முதல் 1070 வரை நீடித்தது. சோழர்களின் ஆட்சிக் காலத்தில் சிங்கள அரசர்கள் அனுராதாபுரத்தை விட்டு நீங்கி தென்னிலங்கைக்கு நகர்ந்து கொண்டனர். வடக்கில் வாழ்ந்த சிங்கள மக்கள் குறித்து எத் தகவல்களும் இல்லை.
சோழர்களின் ஆட்சிக் காலத்தின் பின்னர் 1215-யில் கலிங்க நாட்டில் இருந்து வந்த கலிங்க மாகன் கேரளப் படைகளின் துணையோடு வடக்கு இலங்கையை கைப்பற்றிக் கொண்டான். அக் காலக் கட்டத்தில் கலிங்கத்தில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் வந்தவர்கள் வடக்கு இலங்கையில் குடியேறினார்கள். கலிங்க மாகனின் ஆட்சி முடிந்த பின்னர் தாய்லாந்தில் இருந்து வந்த சந்திரபானு வடக்கு இலங்கையை கைப்பற்றிக் கொண்டான். இவனது படையணிகளில் சாவகர்கள், கேரளர்கள், கலிங்கர்கள், தமிழர்கள் இடம்பெற்றிருந்தனர் என கூறப்படுகின்றது. சந்திரபானுவே பொலன்னறுவையில் இருந்த தலைநகரை யாழ்ப்பாணத்துக்கு மாற்றினான். இதுவே யாழ்ப்பாண அரசு உருவாக காரணமாக இருந்தது.
சந்திரபானுவுக்கு பின் அவனது மகன் சாவகன் மைந்தன் ஆட்சியேற்ற போதும், அவனது விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்த சிங்கள மன்னர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் தளபதிகள் தலைமையில் பாண்டிய அரசு அவன் மீது படையெடுத்தது. அவனுக்கு பின்னர் பாண்டிய தளபதிகளில் ஒருவனான குலசேகர சிங்கை ஆரியன் என்பவன் யாழ்ப்பாண ராசதானியின் அரசனாக முடி சூட்டிக் கொண்டான். இலங்கையின் முதல் தமிழரசு 1263-யில் தொடக்கம் பெற்றது. இது 1624-யில் போர்த்துக்கேயர் வெற்றிக் கொள்ளும் வரை நீடித்தது. இக்காலத்தில் தான் வடக்கு இலங்கையில் நிலையான தமிழர் குடியேற்றங்கள் உருவாக்கம் பெற்றன என்பது வரலாறு. பெரும்பாலானவர்கள் தொண்டை மண்டலம், தஞ்சை மண்டலம் மற்றும் கேரளத்தில் இருந்து இக் காலக் கட்டத்தில் குடியேறினார்கள். இவர்களும் பிற்காலத்தில் இலங்கைத் தமிழர்கள் என அறியப்பட்டார்கள்.
மேற்குக் கரையில் முஸ்லிம்கள் 10-ம் நூற்றாண்டில் இருந்தே வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறப்பட்ட போதும், பெரும்பாலான மேற்குக் கரை முஸ்லிம்கள் கோட்டை சிங்கள அரசுக் காலத்தில் ( 15-ம் நூற்றாண்டில் ) மலபார் மற்றும் காயல்பட்டினம் உட்பட தென் தமிழகத்தில் இருந்து வியாபாரம், படையணிகள் போன்றக் காரணத்தால் கோட்டை மற்றும் சீதவாக்கை சமஸ்தானங்களில் குடியேறியவர்கள் ஆவார்கள். அதன் பின்னர் பிரித்தானியா காலத்தில் குடியேறிய முஸ்லிம்கள் பலரும் மேற்கு முஸ்லிம்களோடு ஐக்கியப்பட்டுக் கொண்டனர்.
12-ம் நூற்றாண்டளவில் இந்தியாவின் மலபார் மற்றும் தென் தமிழகக் கரைகளில் இருந்து மேற்கு இலங்கைக் கரையில் குடியேறியவர்கள் முக்குவர்கள். இவர்கள் வியாபாரம், முத்துக்குளிப்பு, மீன்ப் பிடிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததோடு இலங்கையின் மேற்கு கரை முழுவதையும் தமதுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆரம்பத்தில் புத்தளம், நீர்கொழும்பு பகுதிகளில் குடியேறிய இவர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க சிங்கள அரசுகள் 14, 15-ம் நூற்றாண்டளவில் இந்தியாவின் நாகைப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து கரையார் எனப்படும் குருகுல சத்திரியர்களை அழைத்து வந்தார்கள். இக்காலக் கட்டத்தில் ஆதிக்கம் இழந்த முக்குவர்கள் பலரும் இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் சென்று குடியேறினார்கள். இவர்களில் பலரும் இஸ்லாமுக்கும் மதம் மாறிக் கொண்டனர். டச்சக் காலத்தில் எழுந்த சட்டங்களில் கிழக்கு வாழ் முக்குவர்களுக்கு தனிச் சட்ட உரிமையை கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
12-ம் நூற்றாண்டளவில் இந்தியாவின் மலபார் மற்றும் தென் தமிழகக் கரைகளில் இருந்து மேற்கு இலங்கைக் கரையில் குடியேறியவர்கள் முக்குவர்கள். இவர்கள் வியாபாரம், முத்துக்குளிப்பு, மீன்ப் பிடிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததோடு இலங்கையின் மேற்கு கரை முழுவதையும் தமதுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆரம்பத்தில் புத்தளம், நீர்கொழும்பு பகுதிகளில் குடியேறிய இவர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க சிங்கள அரசுகள் 14, 15-ம் நூற்றாண்டளவில் இந்தியாவின் நாகைப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து கரையார் எனப்படும் குருகுல சத்திரியர்களை அழைத்து வந்தார்கள். இக்காலக் கட்டத்தில் ஆதிக்கம் இழந்த முக்குவர்கள் பலரும் இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் சென்று குடியேறினார்கள். இவர்களில் பலரும் இஸ்லாமுக்கும் மதம் மாறிக் கொண்டனர். டச்சக் காலத்தில் எழுந்த சட்டங்களில் கிழக்கு வாழ் முக்குவர்களுக்கு தனிச் சட்ட உரிமையை கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் குடியேறிய கரையார்கள் மேற்கு கரை முழுவதும் குடியேறிக் கொண்டார்கள். யாழ்ப்பாணம் முதல் புத்தளம் வரைப் பகுதிகளில் இவர்கள் தமிழர்களாகவும், புத்தளம் தொடங்கி தென்னிலங்கைக் கரை வரை சிங்களவர்களாகவும் மாற்றமடைந்தனர். சிங்கள அரசியல், பௌத்த மத அதிகாரத்தில் இன்று பெரும் ஆதிக்கம் செலுத்துவோர்களாகவும் கரையார்கள் இருக்கின்றனர்.
16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடிப் பகுதிகளில் இருந்து எண்ணற்ற பரதவர்களை இலங்கையின் மேற்குக் கரையில் குடியமர்த்தினார்கள். இவர்கள் பலரும் தான் பிற்காலத்தில் நீர்கொழும்புத் தமிழர்களாக அறியப்பட்டனர். இன்று மன்னார் நீங்கலாக பிற மேற்கு கரையில் சிங்களவர்களாக மாற்றமடைந்துக் கொண்டனர். இவர்களில் பெரும்பான்மையானோர் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுவோர்களாக உள்ளனர்.
1815-யில் கண்டி ராச்சியத்தை கைப்பற்றியதோடு முழு இலங்கைத் தீவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிரித்தானியர்கள் காலத்தில் இந்தியாவில் இருந்து நடு இலங்கையில் உள்ள மலைப் பிரதேசங்களுக்கும், சிங்களப் பகுதிகளில் இருக்கும் தோட்டங்களுக்கும் பணியாற்ற தென்னிந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் பலரும் இந்தியா வம்சாவளித் தமிழர்கள் என அறியப்படுகின்றனர். இவர்களை மலையகத் தமிழர்கள், தோட்டக்காட்டு தமிழர்கள் எனவும் கூறுவர். நான் ஏன் பலரும் எனக் கூறுகின்றேன் தெரியுமா, இலங்கைத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேறிய இந்தியா வம்சாவளித் தமிழர்கள் பலரும் காலப் போக்கில் இலங்கைத் தமிழர்கள் என அழைத்துக் கொண்டார்கள். குறிப்பாக வன்னி பெருநிலப் பரப்பில் 1970-களில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழர்களும் - இலங்கைத் தமிழர்களும் கலப்புற்றுக் கொண்டனர். இலங்கை விடுதலையின் போது சிறிமா - சாஸ்த்திரி ஒப்பந்தந்தின் அடிப்படையில் நூறாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்த சுமார் 600, 000 தமிழர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டனர், ஏனையோருக்கு இலங்கைக் குடியுரிமை அளிக்கப்பட்டது.
கடந்த ஆயிரம் ஆண்டுகளாக தென்னிந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் இலங்கைத் தீவுக்கு தமிழர்கள் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. இவர்கள் பலரும் இன்று இலங்கைத் தமிழர்களாக, மலையகத் தமிழர்களாக, முஸ்லிம்களாக, சிங்களவர்களாக பரிணமித்துக் கொண்டனர். பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய இலங்கைத் தமிழர்கள் குறித்த குறிப்புக்களும், வரலாறுகளும் குழப்பமும், சர்ச்சைகளும் வாய்ந்தவை என்பதால் அவைக் குறித்து பிறிதொரு சந்தர்பத்தில் அலசுவோமாக.
~ இக்பால் செல்வன்
~ இக்பால் செல்வன்

